மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே, “சத்ரபதி சிவாஜி மகாராஜரின் வரலாற்று தலைநகரமான ராய்காட் மாவட்டத்தில் நடன பார்கள் இயங்குவது மராட்டிய மரபுக்கு அவமதிப்பு” என்று கடும் விமர்சனம் செய்திருந்தார்.

இந்தக் கருத்து வெளிவந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, நவி மும்பை பன்வேலில் உள்ள ‘நைட் ரைடர்’ என்ற நடன பப்பில் சனிக்கிழமை நள்ளிரவில் எம்என்எஸ் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். கட்டை  மற்றும் கற்களுடன் அவர்கள் உள்ளே நுழைந்து, மேடைகள், ஒளி அமைப்புகள் உள்ளிட்டவை சேதப்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்தக் காணொளிகளில், பாரில் இருந்த மக்கள் பதற்றத்துடன் வெளியே ஓடுவதும், உள்ளே பொருட்கள் உடைக்கப்படும் காட்சிகளும் தெளிவாக காணப்படுகின்றன. தாக்குதலுக்குப் பிறகு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் ஏற்கனவே அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றனர்.

“>

 

தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பார் உரிமையாளரிடமிருந்து புகார் பெறப்பட்டுள்ளதுடன், தாக்குதலாளர்களை அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை எம்என்எஸ் கட்சி தரப்பில் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. ஆனால் பொதுமக்கள் மத்தியில் இந்த தாக்குதல் குறித்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாதுகாப்பற்ற சூழ்நிலையைத் தவிர்க்க, அரசும், போலீசும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.