
மதுரை விமான நிலையத்தில் இன்று விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக பாஜக கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த திருமாவளவன் கூறியதாவது, அமித்ஷா மட்டும் திரும்பத் திரும்ப அதிமுகவுடன் கூட்டணி என கூறிக்கொண்டு இருக்கிறார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்து பெரிதாக ஒன்றும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார். கூட்டணி ஆட்சி என்பது இங்கு இல்லை. அதிமுக அதற்கு உடன்படாது என்கிற பதிலை எடப்பாடி பழனிச்சாமி பாஜகவிற்கு தான் கூறியுள்ளார்.
அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என இபிஎஸ் கூறியது பாஜகவுக்கான பதில் தான்.அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என எடப்பாடி பழனிச்சாமி கூறினார். கபளீகரம் செய்வதற்கு யார் முயற்சி செய்கிறார்கள் என்பதையும் அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
அதிமுகவை திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் கபளீகரம் செய்ய வாய்ப்பு கிடையாது. அப்படி ஒரு முயற்சியை மேற்கொள்ளவும் முடியாது. உடன் இருக்கும் க..ட்சிகளால் மட்டும்தான் விழுங்கி செரிக்கிற முயற்சிகளை மேற்கொள்ள இயலும். ஆகவே பாஜகவிற்கு பதிலளிக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி அந்த கருத்தை கூறியதாக எடுத்துக் கொள்ளலாம் என திருமாவளவன் கூறியுள்ளார்.