
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள திலாரி காவல் நிலைய எல்லையில் பரபரப்பான சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது விவசாயியான ஹாரூன் என்பவர், தனது மனைவி தங்க நகைகள், ரொக்கம் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களுடன் தலைமறைவானதாகவும், வேறொருவருடன் ஓடியதாகவும் புகார் அளித்துள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்த ஹாரூன், கடந்த 14 ஆண்டுகளாக தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த மே 22ஆம் தேதி அவரது மனைவி வீட்டில் இருந்த ₹2.5 லட்சம் ரொக்கம், அரை கிலோ வெள்ளி மற்றும் 8 கிராம் தங்க நகைகளை எடுத்து கொண்டு வெளிநாட்டுப் பாஸ்போர்டுடன் திடீரென மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது. மேலும், அவரின் மனைவி ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும், அவருடன் சேர்ந்து வீட்டை விட்டு ஓடியதாகவும் ஹாரூன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மே 25ஆம் தேதி திலாரி காவல் நிலையத்தில் காணாமல் போனவர் என புகார் அளிக்கப்பட்டது. பின்னர், மனைவி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொத்தில் தனது பங்கைக் கோரியதாகவும், அதை வழங்காவிட்டால் கொலை செய்யப்படுவீர்கள் என மிரட்டியதாகவும் ஹாரூன் தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கணவர்களை கொல்வது தொடர்பான செய்திகள் அதிகம் பரவுவதால் தான் இந்த மிரட்டல்களால் பயமடைந்ததாகவும் கூறினார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் ஹாரூன், சம்பவம் நடந்த நாளன்று பண்ணைக்கு சென்றிருந்தார். அவர் திரும்பி வந்தபோது குழந்தைகள் தங்கள் தாயார் “முஸ்தபாபூருக்கு” சென்றதாக தெரிவித்தனர். ஆனால், மாலை வரை அவர் திரும்பாததையடுத்து தேட தொடங்கினார். உறவினர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் தேடியபோதும் எந்த தகவலும் கிடைக்காததால், அவர் நேரடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில், திலாரி காவல் நிலைய போலீசார் அவரின் மனைவியை தேடும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பரவி வருகின்றது. தனது மனைவி வீட்டிற்கு திரும்பி வரவேண்டும் என்றும், தனது குழந்தைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் ஹாரூன் வலியுறுத்தியுள்ளார். மேலும், தனது உயிருக்கு நேரிடும் ஆபத்தால் நிம்மதியாக வாழ முடியாத நிலைக்கு சென்றுள்ளதால், போலீசார் தற்காலிக பாதுகாப்பு வழங்கி, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.