அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப் நடிகர்கள் கிருஷ்ணா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு போதை பொருள் விநியோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் கைதான நிலையில் அதிமுக பிரமுகர் பிரதீப் தான் தனக்கு போதை பொருளை பயன்படுத்த கற்றுக் கொடுத்ததாக கூறினார். ஏற்கனவே அவர் நுங்கம்பாக்கம் பாரில் தகராறு மற்றும் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் போதைப்பொருள் விநியோகம் செய்த வழக்கிலும் அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரதீப்புடன் பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இதற்கு வினோஜ் பி செல்வம் விளக்கம் கொடுத்துள்ளார்.

எனக்கும் பிரதீப்புக்கும் ஒன்றாக படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டது. ஆனால் கடந்த ஏழு வருடங்களாக நான் அவருடன் எந்த தொடர்பிலும் இல்லை. நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பேஸ்புக்கில் இருக்கிறது. அது சுமார் பத்து வருடங்களுக்கு முன்பாக பதியப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் சமூக வலைதளத்தில் இருக்கும் புகைப்படத்தை எடுத்து என்னுடைய பெயரை இணைப்பது வேடிக்கையாக இருக்கிறது என்று கூறினார்.