
மத்திய பிரதேசம் இந்தூரை சேர்ந்த தொழிலதிபரான ராஜா ரகுவன்ஷி என்பவர் மேகலாயா மாநிலம் ஷில்லாங் பகுதியில் அவரது மனைவி, நல்ல காதலன் மற்றும் கூலிப்படையினரால் ஹனிமூன் சென்ற இடத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஷில்லாங் காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) மற்றும் இந்தூர் குற்றப்பிரிவு போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், பலாசியா பகுதியில் உள்ள தொழில் இல்லத்திற்குப் பின்னால் உள்ள சாக்கடையிலிருந்து முக்கிய ஆதாரங்களை மீட்டுள்ளனர்.
அதில், சோனம் ரகுவன்ஷியின் மடிக்கணினி, தங்க நகைகள், நாட்டுத் துப்பாக்கி மற்றும் ராஜா ரகுவன்ஷியின் மொபைல் ஆகியவை உள்ளதாக போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த முக்கிய விசாரணைக்கு உதவியவர் குற்றவாளி ஷிலோம் ஜேம்ஸ் ஆவார். அவரது வழிகாட்டலுடன், காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இந்த ஆதாரங்களை மீட்டுள்ளனர்.
சோனம் ரகுவன்ஷியின் சூட்கேஸ் மற்றும் நகைகள் உள்ளிட்ட பல பொருட்கள் ஹிராபாக்கில் உள்ள ஒரு பிளாட்டிலிருந்து காணாமல் போனதாக அறியப்பட்ட நிலையில், தற்போது அவை வடிகாலில் வீசப்பட்டிருப்பதும் உறுதியாகியுள்ளது.
போலீசார் வழங்கிய தகவலின்படி, ஷிலோம் ஜேம்ஸுடன் சேர்ந்து லோகேந்திர தோமர் மற்றும் பல்விந்தர் ஆகிய இருவரும் குற்றத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மூவரும் சாட்சியங்களை அழிக்க முயன்றதாகவும், பையில் இருந்த முக்கிய ஆதாரங்களை எரித்து, பிறகு வடிகாலில் வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தூரில் பல நாட்களாக முகாமிட்டு, SIT குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது மீட்கப்பட்ட மடிக்கணினி மற்றும் பிற பொருட்கள், சோனத்திற்கு எதிராக வலுவான வழக்கை அமைக்க முக்கிய ஆதாரங்களாக இருக்கலாம் என காவல்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் இது ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.