மகாராஷ்டிராவின் ஃபரிதாபாத் நவீன் நகர் பகுதியில், மாமனார் தனது மருமகளான தனுவை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளியாகி உள்ளது. பின்னர்,  அவரின் உடலை வீட்டுக்கு வெளியில் தோண்டப்பட்ட குழியில் புதைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தனுவின் மாமனார் பூப் சிங் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மாமியார் சோனியா மற்றும் கணவர் அருணும் இந்த கொலைத் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வந்ததால், தற்போது தலைமறைவில் உள்ள அருணை போலீசார் தேடி வருகின்றனர்.

தனுவின் உடல் கடந்த ஜூன் 20ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் போலீசாரின் விசாரணையில், ஏற்கனவே ஏப்ரல் 21ஆம் தேதியே கொலை செய்யப்பட்டு குழியில் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. ஏப்ரல் 20ஆம் தேதி வீட்டின் முன் குழி தோண்டப்பட்டு ஏப்ரல் 22ஆம் தேதிக்குள் மூடப்பட்டது. தனு காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தும், தொடக்கத்தில் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பின்னர், இந்த விவகாரம் டிசிபி உஷா குண்டுவிடம் சென்றதும், மேலான விசாரணைக்கு உத்தரவு வழங்கப்பட்டது.

அதன்பேரில் குற்றப்பிரிவு அதிகாரிகள் நடத்திய விசாரணையில், பூப் சிங் தனது மருமகளை பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் கழுத்தை நெரித்து கொன்றது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவருடைய உடலை வீட்டின் வெளியே உள்ள குழியில் புதைத்து மறுநாள் அந்த இடத்தில் கான்கிரீட் ஸ்லாப் பதித்தனர். அருணும் சோனியாவும் இந்த கொலையை முன்னதாகவே திட்டமிட்டதாகவும், சம்பவத்தின் போது அவர்கள் இல்லாமல் செல்லும் திட்டமும் அதற்கான ஒரு பகுதியாக இருந்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர். தற்போது வழக்கு டிஎல்எஃப் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சொந்த மருமகளை வரதட்சனை கொடுமை செய்து மாமனாரே பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.