
உத்தரபிரதேச மாநில ஹத்ராஸ் மாவட்டத்தில் ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட சாலை விபத்து, மகிழ்ச்சியான சூழலை துக்கத்தில் மூழ்கடித்தது . அலிகர் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் அலி, தனது உறவினரின் திருமணத்திற்கு ஹத்ராஸ் மாவட்டத்தின் மொஹ்ரி கிராமத்திற்கு வந்திருந்தார்.
திருமண ஊர்வலத்துக்குச் சேர்ந்த பின் பேருந்தில் சென்றுகொண்டிருந்த போது, அந்த சிறுவன் தலையை ஜன்னலுக்கு வெளியே நீட்டிய நிலையில், எதிரே வந்த லாரி நேருக்கு நேர் மோதியது. அந்த மோதலில் சிறுவனின் தலை உடலிலிருந்து துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரமான சம்பவத்தை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். குழந்தையின் தந்தை உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து, சாலையில் கிடந்த தலையை எடுத்து கண்ணீர் விட்டார். இந்நிகழ்வின் காரணமாக திருமணத்திற்காக கூடிய உறவினர்கள் அனைவரும் பரிதாப நிலையில் அழுதனர். திருமணத்துக்காக எழுந்த சந்தோஷம் சில நிமிடங்களில் இரங்கலாக மாறியது. திருமண ஊர்வலத்தில் இருந்த அனைவரும் மௌனத்தில் நின்றனர். இந்த துயரச் செய்தி கிராமத்தில் பரவியதும், ஏராளமான மக்கள் சம்பவ இடத்திற்கு கூடினர்.
தகவல் கிடைத்தவுடன், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, லாரி மற்றும் திருமண பேருந்தின் ஓட்டுநர்களை கைது செய்தனர். சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. திருமண விழாவை ரத்து செய்ய முடியாத சூழ்நிலையில், குறைந்த விருந்தினர்களின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. குழந்தையின் துயர மரணம், ஒரு குடும்பத்தின் வாழ்வையே சோகத்தில் தள்ளி விட்டது.