உத்தரபிரதேச மாநிலம் காஜிபூரில், காதல் விவகாரம் சம்பந்தமாக நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுவாவ் கிராமத்தைச் சேர்ந்த ரோஹித் என்பவரின் மனைவி பிரியங்கா. இவர் தனது காதலர் பிந்துவுடன் வயலில் இருக்கும்போது கணவரின் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகளிடம் பிடிபட்டார். இதையடுத்து, இருவரையும் காளி கோவிலுக்குள் அழைத்து சென்று கயிறு கட்டி நிறுத்தினர். பின்னர் அங்குள்ளவர்களின் வற்புறுத்தலால் அவர்களுக்கு  திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவம் வீடியோவாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

2023ல் ரோஹித் மற்றும் பிரியங்கா திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்குப் பிறகு, இருவரும் நொய்டாவிற்கு பணி காரணமாக சென்றனர். அங்கு ரோஹித்தின் சக ஊழியரான பிந்து, அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றதால் பிரியங்காவுடன் கள்ளகாதல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஜூன் 18-ம் தேதி, ரோஹித் மருந்து வாங்க வெளியேறியபோது, பிரியங்கா தனது காதலருடன் வயலுக்கு சென்றதாகவும், இதனை கண்ட கிராமவாசிகள் இருவரையும் பிடித்து கணவர் குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சண்டையும் ஏற்பட்டது.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இருவரும் கைது செய்யப்பட்டனர். அதற்குப் பிறகு பிரியங்கா தனது கணவர் ரோஹித், அவரது குடும்பத்தினர் மற்றும் 10 கிராமவாசிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என சி.ஓ. நகர சேகர் செங்கர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூகத்தில் சலசலப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தி வருகின்றது.