கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி சித்தம்மா (33) என்ற மனைவியும், அக்பினா (8), அவனி (6) என்ற மகள்களும், ஆர்யா என்ற (2) மகனும் இருந்துள்ளனர். இவர்கள் ராகவேந்திரா என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக்கொண்டு பரதனஹள்ளி பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். அங்கு ஆடு மேய்க்கும் தொழில் செய்துவிட்டு குடும்பத்தோடு அங்கேயே இருந்த நிலையில் நேற்று முன்தினம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் சித்தம்மா கடுமையான கோபம் அடைந்து தன்னுடைய குழந்தைகள் மூவரையும் தூக்கிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு குட்டையில் குழந்தைகள் மூவரையும் வீசிவிட்டு அவரும் குதித்து விட்டார். இதனை அறிந்து குமார் அதிர்ச்சி அடைந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகள் மற்றும் அந்த பெண்ணின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.