
அஹமதாபாத் நகரத்தில் கடந்த வியாழக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 33 வினாடிகளில் மெகானி நகர் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்குள் மோதியது. இதில் பயணித்த 241 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த துயரத்தில், மகிழ்ச்சியூட்டும் அதிசயமாக, 40 வயதான விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற இந்திய-பிரிட்டிஷ் பிரஜை மட்டுமே உயிருடன் வெளியே வந்துள்ளார்.
View this post on Instagram
தற்போது, அந்த தருணத்தின் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புகைமண்டலத்திற்கிடையே அவர் சற்று நடுக்கத்துடன் பின்னால் பார்த்தபடி நடந்துவரும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
விஷ்வாஸ், தனது சகோதரர் அஜய் குமார் ரமேஷுடன் விமானத்தில் பயணித்திருந்தார். விஷ்வாஸ் 11A இடத்தில் இருந்தார், அஜய் வேறு வரிசையில் இருந்தார். “புறப்பட்ட 30 வினாடிகளில் ஒரு பெரிய சத்தம் கேட்டது. அடுத்த நொடியில் விமானம் கீழே விழுந்தது.
விழித்தபோது சடலங்கள் இடம் பெற்றிருந்தன. பயத்தில் ஓடினேன். யாரோ ஒருவர் என்னை ஆம்புலன்ஸில் அழைத்து சென்றார்” என விஷ்வாஸ் தெரிவித்தார். விபத்துக்குப் பிறகு அஜய் காணாமல் போனதாகவும், “அவர் என் உடன் பயணித்தார். இப்போது அவரை காண முடியவில்லை” என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.
விஷ்வாஸ் தற்போது அசார்வா சிவில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு மார்பு, கண்கள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. லண்டனில் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வசிக்கும் விஷ்வாஸ், சமீபத்தில் தம்பியுடன் தியூக்குச் சுற்றுலா சென்றிருந்தார்.
இந்த வீடியோ சமூகத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், அதிகாரிகள் மற்றும் பொதுமக்களிடம் ஒரு அதிசயமாகக் கருதப்படுகிறது. கோர விபத்தில் ஒரே நபர் உயிருடன் வெளியே வந்திருப்பது ஆழ்ந்த சோகத்துக்கிடையே ஒரு நம்பிக்கை கதிர் போல அமைந்துள்ளது.