அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 241 பேர்உயிரிழந்தனர். இந்த பேரழிவில் பல மர்மமான மற்றும் உணர்ச்சிப் பூர்வமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. அதில் ஒன்று, தனது மனைவியின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு லண்டனுக்குத் திரும்பும் பயணத்தில் உயிரிழந்த அர்ஜுன்பாய் படோலியாவைச் சேர்ந்தது.

அதாவது குஜராத் மாநிலம், அம்ரேலி மாவட்டம் வாடியா கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன்பாய் மனுபாய் படோலியா, லண்டனில் வசித்தவர். அவரது மனைவி பாரதிபென், சில நாட்களுக்கு முன்பு லண்டனில் காலமானார். மனைவியின் இறுதி ஆசைப்படி, அவரது அஸ்தியை தம் மூதாதையர் ஊரில் உள்ள ஆற்றில் கரைக்க அர்ஜுன்பாய் தனியாக இந்தியா வந்தார். இவரது 8 மற்றும் 4 வயதுடைய இரண்டு மகள்களை லண்டனில் விட்டுவிட்டு வந்திருந்தார். கடைசியாக அகமதாபாத்தில் அனைத்து சடங்குகளையும் முடித்து, அந்த பயணத்திலேயே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் ஏறியுள்ளார்.

விபத்தில் அர்ஜுன்பாயும் உயிரிழந்த நிலையில், அவரது இரு மகள்கள் தற்போது பெற்றோரில்லாத நிலையில் தவிக்கின்றனர். குடும்பத்தில் ஒருவர் கூட உடனடியாக பாதுகாவலராக இல்லை என்பதாலும், அவர்கள் எதிர்காலம் தற்போது பல கேள்விகளுக்கு மத்தியில் உள்ளது. சமீபத்தில் பாரதிபென்னின் அஸ்தி கரைக்கப் பட்ட இடமே இப்போது அவருடைய கணவரின் மரணச் செய்தியால் அதிர்ச்சியடைந்துள்ளது.

இந்தச் சம்பவம், அகமதாபாத் விமான விபத்தின் பின்னணியில் நிகழ்ந்த மிகுந்த வேதனை ஏற்படுத்தும் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இரு பெற்றோர்களையும் ஒரே வாரத்தில் இழந்த சிறுமிகளை நினைக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. தற்போது, “அர்ஜுன்பாய் தந்தியின் இறுதிச் சடங்குகளை யார் செய்வார்கள்? இவரது மகள்கள் யாரால் பராமரிக்கப்படுவர்?” என்பதே வாடியா மக்களின் மனதை பிய்த்தக் கொண்டிருக்கும் பெரிய கேள்வியாக உள்ளது.