கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில், சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொல்ல முயன்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இவர், தனது காதலனுடன்  கள்ள உறவுக்குத் தடைபோடும் குடும்பத்தினரை, குறுக்கீடாக கருதி, அவர்களுக்கு மெதுவாக விஷம் கொடுத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சைத்ரா மற்றும் கணவர் கஜேந்திரா தம்பதிக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன  நிலையில், இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக சைத்ரா, பக்கத்து வீட்டில் வசிக்கும் ஷிவு என்பவருடன் நட்பு வளர்த்துக் கொண்டார். இந்த உறவு தெரிய வந்தபோது, கணவர் சண்டையிட்டு வீட்டில் சமரசம் செய்திருந்தாலும், பின்னர் சைத்ரா விஷ திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில் கஜேந்திரா திடீரென நோய்வாய்ப்பட்டபோது, ​​மருத்துவர்கள் அவருக்கு உணவு விஷமாக மாறியதாக  கூறினர். இதனால் தனது மனைவி மீது சந்தேகமடைந்த கஜேந்திரா வீட்டைச் சோதனையிட்டபோது, மனைவியின் பையில் இருந்த மாத்திரைகள் பற்றி சந்தேகப்பட்ட கணவர், அவற்றை மருத்துவரிடம் காட்டியபோது, அவை விஷ மாத்திரைகள் என உறுதி செய்யப்பட்டன. பின்னர் அவர் போலீசில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், சைத்ரா அந்த விஷத்தை தினசரி உணவில் கலந்து கணவருக்கும், குழந்தைகளுக்கும், மாமியார் மற்றும் மாமனாருக்கும் கொடுத்து வந்தது தெரியவந்தது. இதனால்  அனைவரும் உடல்நிலை பாதிப்புக்கு உள்ளாகி, இறந்து விடுவார்கள் என்று திட்டமிட்டிருந்தார். இந்த விஷயத்தை உணர்ந்த கணவர் உடனடியாக மருத்துவமனையில் அனைவரையும் சேர்த்ததுடன், பெலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனையடுத்து, பெலூர் போலீசார் சைத்ராவை கைது செய்ததுடன், கொலை முயற்சி, விஷம் கொடுத்தது மற்றும் மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சைத்ராவின் காதலன் ஷிவுவின் மீதும் வழக்கு பதிந்து, அவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம், கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.