திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று உயிரிழந்த ஒருவரின் சடலம், வேறொரு நபருடையதாக மாற்றப்பட்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சடலம் ஒப்படைப்பு காரணமாக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

திருத்தணை அருகே உள்ள பூச்சிரெட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற விவசாயக் கூலித்தொழிலாளி, குடும்ப பிரச்சனையால் பூச்சி  மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, அவர் உயிரிழந்தார். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து, உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆனால் அதிர்ச்சியான சம்பவம் அப்போது நடந்தது. ராஜேந்திரனின் சடலத்திற்கு பதிலாக, வடமாநிலத்தைச் சேர்ந்த மற்றொரு நபரின் சடலம் அவரின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டது. இதனை கவனித்த உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். விசாரணையில், ராஜேந்திரனின் சடலம் பீகாரில் உள்ள அந்த நபரின் குடும்பத்தினரிடம் அனுப்பப்பட்டிருப்பது தெரியவந்தது.

இந்த தவறான பரிமாற்றம் குறித்து கேள்வி எழுப்பிய உறவினர்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனை வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பீகார் மாநிலத்திலிருந்து ராஜேந்திரனின் சடலம் மீண்டும் திரும்பக் கொண்டு வரப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு தகவல் கொடுக்கப்பட்டு முதியவரின் சடலத்தை இங்கு கொண்டு வரும்படி கூறப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த தவறுக்குக் காரணமான மருத்துவனை நிர்வாகத்தின் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.