வடகொரியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு செல்போனை ஆய்வு செய்த வல்லுநர்கள் அதிர்ச்சியான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளனர். உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு வாழும் வடகொரியா, தங்கள் மக்களை வெளிநாட்டு கலாச்சாரத்திலிருந்து பாதுகாக்கும் பெயரில் கடுமையான கண்காணிப்பு முறைகளை பின்பற்றி வருகிறது. அந்த செல்போனில், தென்கொரிய கலாச்சார சொற்கள் தானாகவே மாற்றப்படுவதும், எடுத்துக்காட்டாக “Oppa” என்பது “Comrade” ஆகவும், “South Korea” என்பது “Puppet State” ஆகவும் மாற்றப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிக அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், அந்த செல்போன் ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும் ஒரு முறை ஸ்கிரீன்‌ஷாட் எடுத்து பயனாளிக்கு தெரியாமல் சேமிக்கிறது. அந்த தகவல்களை அரசு அதிகாரிகள் மட்டுமே பார்க்க முடியும். இது மக்களின் செயல்களை முழுமையாகக் கண்காணிக்க வடகொரியா ஏற்படுத்திய திட்டமிடலாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அவர்கள் வெளி உலகத்தைப் பற்றி அறிந்து கொள்வதை முற்றிலுமாகத் தடுக்க முயற்சிக்கின்றனர்.

மேலும், தென்கொரிய K-Pop பாடல்கள் மற்றும் திரைப்படங்களைப் பகிர்ந்ததற்காக ஒரு 22 வயது இளைஞர் பொதுமன்றத்தில் தூக்கில் போடப்பட்ட சம்பவமும் இந்த மனித உரிமை மீறல்களின் எல்லையை காட்டுகிறது. கடந்த 2020ல் கொண்டுவந்த “reactionary ideology and culture” சட்டத்தின் கீழ், வெளிநாட்டு ஸ்டைல்கள், உடைகள், தலைமுடி அலங்காரம், கண்ணாடி அணிதல் போன்றவையும் தண்டனைக்குரியதாக கருதப்படுகிறது. இந்நிலையில், வடகொரிய இளைஞர்கள் தென்கொரிய கலாச்சாரத்தின் மீது அதிக விருப்பம் காட்டுவதும், நாட்டிலிருந்து தப்பிச்செல்ல பலர் விரும்புவதாகவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.