
ஆந்திர மாநிலத்தில் உள்ள கடப்பா மாவட்டத்தில் காவல்துறையினருக்கு லாரியில் செம்மரம் மறைத்து கடத்துவதாக ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை செய்வதற்காக அப்பகுதி வழியே வந்த லாரியை நிறுத்த முயன்றனர். ஆனால் லாரி நிற்காமல் சென்றதை அடுத்து சோதனை சாவடிக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் லாரியை தடுக்க தயார் நிலையில் இருந்தனர். ஆனால் லாரியை பாதியிலேயே விட்டுவிட்டு ஓட்டுனர் மற்றும் லாரியில் இருந்தவர்கள் குதித்து அப்பகுதி வழியாக தப்பி ஓடி உள்ளனர். இதனை அடுத்து லாரியை சோதனை நடத்தியதில் காய்கறிகளுக்குள் செம்மரம் மறைத்து வைத்து கடத்தப்பட்டது தெரியவந்தது.
மேலும் லாரியில் இருந்த 2 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் தப்பி ஓடிய ஓட்டுனர் மற்றும் கடத்தல் காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூபாய் 4.5 கோடி என கூறப்படுகிறது. புஷ்பா பட பாணியில் செம்மர கட்டைகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.