தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி. இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா(28). இந்த தம்பதியினருக்கு பவித்ரா(7) என்ற மகளும், முகில் என்ற பிறந்து 10 மாதமே ஆனால் ஆண் குழந்தையும் இருந்தனர்.

நேற்று அப்பகுதியில் உள்ள தோட்டத்து வீட்டில் வெண்ணிலாவும் 10 மாதம் ஆண் குழந்தையும் சடலமாக கிடந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தை மற்றும் வெண்ணிலாவின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

அதாவது கணவன் மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்ணிலா தனது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். அதன் பிறகு மன உளைச்சலில் 10 மாத குழந்தையை துப்பட்டாவால் இடுப்பில் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் வெண்ணிலா யாருடனோ கோபமாக பேசியுள்ளார். அவர் யாரிடம் பேசினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.