ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம், மார்வார் ஜங்ஷன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பர்சா கிராமத்தில், 9 மாத கர்ப்பிணியான தனது மனைவியை 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தள்ளிய கொடூர கணவரின் செயல் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பெண்ணின் கணவர் கொடூரமாக நடந்து கொண்டதற்கான காரணம் முழுமையாக தெரியவில்லை.  பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் கிணற்றில் விழும்போது, ஒரு கல்லை பிடித்து கொண்டு 28 மணி நேரம் வரை சுவரில் தொங்கிக்கொண்டு உயிரைக் காக்க முயற்சித்தார்.

இந்நிலையில், அந்த வழியாக வந்த பொதுமக்கள் அவரது அலறலைக் கேட்டு உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், போலீசார் மற்றும் கிராம மக்கள் இணைந்து அந்தப் பெண்ணை கயிறு உதவியுடன் மீட்டனர்.

பல மணிநேரம் போராடிய நிலையில், பயத்தில் பேச முடியாத அளவிற்கு இருந்த அந்த பெண் காஞ்சன் (21), தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாதிக்கப்பட்ட காஞ்சன் கூறியதாவது, எனது கணவருக்கு மற்றொரு மனைவியும் உள்ளார். எனது கணவர் எங்களை சந்திக்க அடிக்கடி வருவார் என கூறினார். தற்பொழுது தலைமறைவாக உள்ள குற்றவாளியை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.