
உத்தர பிரதேசம் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் அனுல் ஹசன். கடந்த பிப்ரவரி மாதம் ராணிகஞ்ச் என்ற கிராமத்தில் இரு தரப்பினருக்கு இடையில் மோதல் ஏற்பட்ட போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது பிரபல ரவுடியான அனுல் ஹசன் என்பவர் நடத்திய துப்பாக்கிய சூட்டில் சிலர் காயமடைந்தனர்.
இதனால் போலீசார் அனுல் ஹசன் மீது வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர். ஆனால் அனுல் ஹசன் தலைமறைவானதால் போலீசார் தனிப்படை அமைத்து அனுல் ஹசனை தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து அனுல்ஹசனை பற்றி தகவல் கொடுப்பவருக்கு ரூபாய் 50 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவிப்பு வெளியிட்டு இருந்தனர்.
இதனால் அனுல் ஹசன் தலை மறைவான இடத்தில் இருந்து மாறி கொண்டே இருந்தார். இந்த நிலையில் சுல்தான்பூர் என்ற பகுதியில் அனுல் ஹசன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது பயஹிபூர் என்ற பகுதியில் அனுல் ஹசன் தலைமறைவாகி இருந்தபோது போலீசார் அவரை கைது செய்தனர். பின்பு கைது செய்யப்பட்ட அனுஹசனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.