
உத்திர பிரதேச மாநிலத்தில் பிரக்கியராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்குப் பின் இந்த மகா கும்பமேளா மிகப்பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மூன்று ஆறுகள் இணையும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த விழாவில் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் அனைத்து இடங்களில் இருந்தும் பல கோடி பக்தர்கள் வருகின்றனர். இந்த மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் தேதி தை அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனால் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகவும், இதில் 30 பேர் உயிரிழந்ததாக உத்திரப்பிரதேச மாநிலம் தெரிவித்தது. மேலும் 60 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூபாய் 25 லட்சம் இழப்பீடும் அறிவிக்கப்பட்டது. ஆனால் மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பாஜக தலைமையிலான யோகி ஆதித்யநாத் அரசு மறைப்பதாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தில் உத்தவ்தாக்கரே பிரிவு சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் 30 பேர் என மாநில அரசு தெரிவித்தது அதுதான் உண்மையான எண்ணிக்கையா? ஏன் மறைக்கிறீர்கள்?. ஒருவர் இறந்தாலும் அரசு தான் பொறுப்பு. ஆனால் கண்களால் பார்த்த சாட்சிகள் கூறிய கருத்தின் படி கிட்டத்தட்ட 2000 பேர் இறந்துள்ளனர்.
இதற்கு பாஜக தலைமையிலான மோசமான நிர்வாகமே காரணம் எனவும் குற்றம் சாட்டினார். இந்த கேள்விக்கு பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவை தலைவர் புள்ளி விவரத்துக்கான ஆதாரத்தை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார். இதற்கு முன்னதாகவே எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் மாநிலங்களவை தலைவருமான மல்லிகா அர்ஜுன் கூட்ட நெரிசலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உயிரிழந்ததாக தெரிவித்திருந்தார்.