
சென்னை சாத்தாங்காடு பகுதியில் 1996-ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ஒரு முக்கிய குற்றவாளியை, போலீசார் பீகார் மாநிலம் வரை சென்று கைது செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
1996ம் ஆண்டு ஜூலை 7-ஆம் தேதி, சாத்தாங்காடு பகுதியில் உள்ள ஒரு மில்லில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜிகேல் கிஷோர் சர்மா, தனது நண்பரான மதுரவாத் என்பவருடன் மது அருந்தி, கஞ்சா புகைத்து கொண்டிருந்த போது வாக்குவாதம் ஏற்பட்டது.
அதில் கோபமடைந்த கிஷோர் சர்மா, மதுரவாதின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்தார். பின்னர் அவரது உடலை பையினம் கால்வாயில் வீசியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிஷோர் சர்மாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் சென்ட்ரல் சிறையில் அடைக்கப்பட்ட அவர், 45 நாட்களுக்குப் பிறகு சிறையிலிருந்து வெளியேறி, தனது சொந்த ஊரான பீகார் மாநிலம் தயார் மாவட்டம் ஒலே கிராமத்தில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.
குறித்த நபரை கைது செய்ய சாத்தாங்காடு தனிப்படை போலீசார் 5 முறை பீகாருக்கு சென்று தேடியும் பலனின்றி திரும்பியிருந்தனர். ஆனால் கடந்த வாரம் மீண்டும் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையில், அவர் குட்கா பழக்கம் காரணமாக பக்கத்து வீட்டின் சுவரில் எச்சில் துப்பியதை கவனித்த போலீசார், அதன்பேரில் அந்த வீட்டுக்குள் நுழைந்து சர்மாவை கைது செய்தனர்.
தலைமை துணை ஆணையர் சிவகுமார் மற்றும் உதவி ஆணையர் வீரசாமி தலைமையில், காவலர்கள் ரஞ்சித் மற்றும் சித்திக் ஆகியோர் கொண்ட சிறப்பு குழு இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டது. பிறகு சர்மாவை பீகார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இன்று ரயில் மூலம் சென்னைக்கு கொண்டு வந்தனர்.
அன்று 30 வயதான இளைஞராக இருந்த கிஷோர் சர்மா, தற்போது 59 வயது முதியவராக சென்னை காவல்துறையின் முன்னிலையில் கண்ணீர் விட்டபடி அழுததாக கூறப்படுகிறது. அவரிடம் தற்போது போலீசார் விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர். 29 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த அதிரடி கைது நடவடிக்கை, காவல்துறையின் புலனாய்வுத் திறனை காட்டும் வகையில் பாராட்டை பெற்றுள்ளது.