தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இவர் தற்போது நிகில் சித்தார்த்தா நடிப்பில் உருவாகும் புதிய படத்தை தயாரிக்கும் நிலையில் அந்த படத்தை ராம் வம்சி கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படம் கடலில் நடக்கும் காட்சியை மையப்படுத்துவது போல் உருவாவதாக கூறப்படும் நிலையில் இதற்காக ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு பிரம்மாண்ட தொட்டியில் 2800 லிட்டர் தண்ணீரை சேகரித்தனர்.

இந்த காட்சியை படமாக்குவதற்கு படக்குழு தயாரான போது திடீரென தண்ணீர் தொட்டி வெடித்தது. இதில் தண்ணீர் தொட்டியில் இருந்த தண்ணீர் காட்டாற்று வெள்ளம் போல் ஓடிய நிலையில் படக்குழுவில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இது பற்றி நிகில் சித்தார்த்தா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், படக்குழுவினர் அனைவரும் பத்திரமாக இருக்கிறோம். நாங்கள் பெரிய விபத்தில் இருந்து தப்பித்தோம். விலை உயர்ந்த உபகரணங்களை இழந்தாலும் கடவுள் அருளால் உயிரிழப்புகள் இல்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.