
தமிழகத்திற்கு சமீபத்தில் வருகை புரிந்த உள்துறை மந்திரி அமித்ஷா அடுத்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தனித்து தான் போட்டியிடும் கூறி இருந்தார். ஆனால் அமித்ஷா கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஆர்பி உதயகுமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அவர் பேசியதாவது, திமுக வீட்டுக்கு போகும் நேரம் வந்துவிட்டது. எடப்பாடியார் தலைமையில் எங்கள் கூட்டணிக்கு மாபெரும் வெற்றியை வழங்குவதற்கு தமிழக மக்கள் தயாராகிவிட்டனர். எத்தனை குழப்பங்கள் வந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். நாங்களும் தெளிவாக இருக்கிறோம். நீங்களும் தெளிவாக இருக்கிறீர்கள். ஆனால் யாருடைய அழுத்தத்தாலோ தெளிவு இல்லாதது போல் கேள்வி கேட்கிறீர்கள். அழுத்தம் கொடுப்பவர்களுக்கு தெளிவில்லாமல் இருந்தாலும் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மேலும் கண்டிப்பாக திமுக அரசு வீட்டுக்கு செல்லும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார்.