பிரபலமான லிவர்பூல் அணியின் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டா மற்றும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா, ஸ்பெயினில் நடைபெற்ற பயங்கரமான கார் விபத்தில் உயிரிழந்தனர். போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் பெட்ரோ புரோன்கா இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

விபத்து ஸ்பெயினின் ஜமோரா மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. லம்போர்கினி வகை காரில் பயணம் செய்த இருவரும், வேகமாக செல்லும் போது  டயர் வெடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு வெளியேறி, தீ பிடித்து எரிந்தது. அந்த நேரத்தில் காரில் இருந்த ஜோட்டாவும் ஆண்ட்ரேவும் உயிரிழந்தனர்.

டியோகோ ஜோட்டா, கடந்த மாதம் தனது நீண்ட நாள் காதலியான ரூட் கார்டோசோவை திருமணம் செய்துகொண்டு, இன்ஸ்டாகிராமில் குடும்ப புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். மூன்று குழந்தைகளுக்கு தந்தையாக இருந்த இவர், அண்மையில் நடந்த நேஷன்ஸ் லீக் போட்டியில் போர்த்துகலுக்காக விளையாடி அணி வெற்றிக்கு பங்களித்தார்.

அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வா, போர்த்துகீசிய லிகா புரோவில் விளையாடும் ஃப்சி பெனாஃபீல் அணிக்காக கடந்த சீசன் வரை பங்கேற்றவர். அணியின் லீக் முடிவில் 11வது இடத்தை பிடிக்க பங்களித்திருந்தார்.

இந்த துயரச் செய்தி குறித்து பேசிய போர்த்துகீசிய கால்பந்து தலைவர் புரோன்கா, “டியோகோ ஜோட்டா ஒரு சிறந்த வீரராக மட்டுமல்ல, அசாதாரணமான மனிதராக, அணி தோழர்களாலும் எதிரணிகளாலும் மதிக்கப்படும் ஒருவராக இருந்தார். அவரது மறைவு போர்த்துகீசிய கால்பந்துக்கு தீர்க்கமுடியாத இழப்பாகும்” என்றார்.

மேலும், வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள UEFA பெண்கள் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு முன்னதாக, டியோகோ மற்றும் ஆண்ட்ரே சில்வாவிற்கு மௌன அஞ்சலி செலுத்த போர்த்துகீசிய கால்பந்து கூட்டமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது.

லிவர்பூல் எஃப்சி, ஃப்சி பெனாஃபீல் மற்றும் வீரரின் குடும்பத்தினருக்கு போர்த்துகீசிய நாடு முழுவதும் இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த துயர நிகழ்வு, கால்பந்து ரசிகர்களின் இதயங்களை சிதைக்க, உலக அளவில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது