
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 17 வயது இளம்பெண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவிக்கு 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்து வைக்க வேண்டும் என எண்ணிய மாணவியின் பெற்றோர் கூடலூர் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணம் பேசி முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வாலிபரின் வீட்டில் ஏற்பட்ட துக்க நிகழ்ச்சிக்கு மாணவி பெற்றோருடன் சென்றுள்ளார். இறப்பு நிகழ்ச்சிக்கு சென்ற மாணவியும் அவரது பெற்றோரும் 5 நாட்கள் வரை வாலிபர் வீட்டில் தங்கியுள்ளனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாலிபர் மாணவியை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் திடீரென மாணவிக்கு உடல் நல குறைவு ஏற்பட்ட போது அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரை பரிசோதனை செய்தனர். அப்போது மாணவியை பரிசோதனை செய்த மருத்துவர் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது திருமணம் பேசி முடிவு செய்த நபர் தன்னை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்துள்ளதாக கூறினார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பெயரில் போலீசார் வாலிபர் மீது போக்சோ தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.