
ஆந்திர மாநிலத்தில் உள்ள அச்சம்பள்ளி கிராமத்தில் ஒரு 15 வயது தலித் சிறுமி தன் தாயுடன் வசித்து வருகிறார். இந்த சிறுமி தன் தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் இருக்கிறார். இந்த சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த கிராமத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் சிறுமியின் தாய் தன் மகளை அனுமதித்த நிலையில் பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி எட்டு மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதை கேட்டு சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்த நிலையில் பின்னர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுமியிடம் விசாரணை நடத்திய போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தது. அந்த பள்ளியில் படிக்கும் சக மாணவன் ஒருவரை சிறுமி கடந்த 2 வருடங்களாக காதலித்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஒரு வயலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் மாணவனை அடித்து விரட்டிவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனை செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
பின்னர் அந்த வீடியோவை காட்டி கிட்டத்தட்ட 15 பேர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தனர். கிட்டத்தட்ட 2 வருடங்களாக அந்த சிறுமியை இப்படி பாலியல் பலாத்காரம் செய்த நிலையில் அவர்கள் சிறுமி தற்போது கர்ப்பமாகவே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை மிரட்டி வன்கொடுமை செய்த 18 முதல் 51 வயது உடைய 13 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பவர்களையும் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதாகவும் அவருக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதாகவும் உறுதி கொடுத்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.