சமூக வலைதளங்களில் மற்றவர்களின் வருமானத்தைத் தெரிந்து கொள்வதில் மக்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் உண்டு. அந்த வகையில், அண்மையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜலஜ் ஹசீஜா என்பவர் பகிர்ந்த வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் ஈ-ரிக்ஷா ஓட்டும் ஒருவரிடம் அவரது ஒருநாள் வருமானம் குறித்து ஜலஜ் கேள்வி எழுப்பினார்.
View this post on Instagram
அதற்கு அந்த ஓட்டுநர் ஒரு நாளைக்கு சுமார் 200 பயணிகள் வரை ஏறுவதாகத் தெரிவித்தார். உடனே அந்த நபர், ஒரு பயணிக்கு பத்து ரூபாய் வீதம் கணக்கிட்டு, ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வருமானம் கிடைப்பதாகக் கூறினார். இதில் சார்ஜிங் மற்றும் நிறுத்துமிடக் கட்டணமாக 130 ரூபாயைக் கழித்துவிட்டுப் பார்த்தால், ஒரு ஓட்டுநருக்கு ஒரு நாளைக்கு 1800 ரூபாய் லாபம் கிடைப்பதாகக் கணக்கிட்டார்.
இதன் மூலம் ஒரு ஈ-ரிக்ஷா ஓட்டுநர் மாதம் 50,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார் என்றும், அவர் தனக்குத்தானே முதலாளியாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்றும் ஜலஜ் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான பார்வையாளர்களைப் பெற்ற இந்த வீடியோவிற்கு மக்கள் கலவையான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். சிலர் அலுவலக வேலைக்குச் செல்வதை விட இது சிறந்தது என்று கூறினாலும், வெயில் மற்றும் மழையில் கஷ்டப்பட்டு வேலை செய்வதையும், போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளின் வருகையைப் பொறுத்தே இந்த வருமானம் அமையும் என்பதையும் மறந்துவிடக் கூடாது என்று மற்றொரு தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த வருமானம் அனைத்து ஓட்டுநர்களுக்கும் ஒரே சீராக இருக்காது என்றும் பயனர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
