
பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வரலாற்றாசிரியர் மற்றும் தொலைக்காட்சி ஆளுமையான டாக்டர் நௌமன் நியாஸ், அக்தர் தன்னை அவதூறு செய்ததாகக் குற்றம் சாட்டி, அவருக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அக்தர் அணியில் விளையாடும் காலத்தில் நியாஸ் “கிட் மேன்” போல பைகளை தூக்கியவர் என்ற கருத்து, அவரது சமூக கௌரவத்தை பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அனுப்பப்பட்ட சட்ட அறிவிப்பில், சோயிப் அக்தர் 14 நாட்களுக்குள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் மட்டுமே வழக்கை தவிர்க்க வாய்ப்பு இருப்பதாகவும், இல்லையெனில் அவரிடம் அபராதம் வசூலிக்கும் விதமாக சட்ட நடவடிக்கைக்கு செல்லப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. “என்னிடம் அவர் என்ன செய்தார் என்பது தெரியவில்லை, ஆனால் வீரர்களின் சாமான்களை எடுத்துச் செல்வது மட்டுமே தெரியும்,” என சோயிப் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். இதே பேச்சு தான் நியாஸை வேகமாக செயல்பட வைத்தது.
சோயிப் அக்தர் மற்றும் டாக்டர் நௌமன் நியாஸ் இடையே இது முதல் மோதல் அல்ல. கடந்த ஆண்டுகளில், PTV Sports நேரலை நிகழ்ச்சியில் நடந்த மோதலில் நியாஸ், சோயிபை நிகழ்ச்சியை விட்டு வெளியேறச் சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது. பின்னர், அரசியல் தலையீட்டுக்குப் பிறகு, நியாஸ் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியாகின. இப்போது இந்த புதிய வழக்கால், இருவருக்குள்ளான பழைய விரோதம் மீண்டும் தலைதூக்கியுள்ளது.