மேற்குவங்கம் பர்கானாஸ் மாவட்டத்தில் ஜெய் நகர் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை டியூஷன் சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பும் வழியில் சிறுமி காணாமல் போனதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதனை அடுத்து அந்த கிராமத்தில் இருக்கும் குளத்தில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார்.

சிறுமியை யாரோ கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக பெற்றோரும் ஊர் மக்களும் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருக்கிறது. இந்த நிலையில் போலீசார் வேண்டுமென்ற நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்வதாக ஊர் மக்கள் குற்றம் சாட்டி காவல் நிலையத்திற்கும், வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த வழக்கில் போலீசார் சந்தேகத்தின் பெயரில் ஒரு நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலையாளி சிறுமிக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து சைக்கிளில் கடத்தி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர். அது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் கிடைத்தது. இந்த நிலையில் குற்றவாளிக்கு மூன்று மாதங்களுக்குள் தூக்கு தண்டனை வழங்கப்படும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.