
ராணிப்பேட்டை மாவட்டம் புலிவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகத் குமார். இவரது மகள் ஜனனி தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ளார். விடுமுறையை முன்னிட்டு ஜெகத்குமாரின் அக்கா வாணி அவரது மகள்கள் லக்ஷனா, சரண்யா ஆகியோர் ஜெகத்குமாரின் வீட்டிற்கு வந்தனர்.
நேற்று மாலை 6 மணிக்கு வாணி தனது இளைய மகள் சரண்யாவுடன் வீட்டு வாசற்படியில் அமர்ந்து பேசி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த வாலிபர் வீட்டிற்குள் நுழைந்து ஜனனியின் கழுத்து, வயிறு உள்ளிட்ட பகுதிகளில் கத்தியால் கொடூரமாக குத்தினார்.
இதனை தடுக்க சென்ற லக்ஷயாவையும் அந்த வாலிபர் கத்தியால் குத்தி தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த லக்ஷனா மற்றும் வாலிபரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜனனியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்தியவர் ஜி.கே கண்டிகை பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில் காதலை ஏற்க மறுத்ததால் சுப்பிரமணி ஜனனியை கொலை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.