துபாயில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவர், பிராண்டுகள் இன்ஃப்ளூயன்சர்களுக்கு மிகக் குறைவான ஊதியம் வழங்குவதாக கடுமையாக விமர்சித்து, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஒரு ரீல் மற்றும் ஸ்டோரிகளை உருவாக்குவதற்கு வெறும் 150 AED (சுமார் ₹3,600) மட்டுமே வழங்கப்பட்டதாகவும், இது தங்களின் நேரம், படைப்பாற்றல் மற்றும் வளங்களுக்கு மரியாதையின்மையாக இருப்பதாகவும் @rohitbhidu என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
பிராண்டுகள் மற்றும் PR ஏஜென்சிகள் இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்கை பயன்படுத்திக் கொண்டாலும், உரிய ஊதியம் வழங்குவதில்லை என்று குற்றம்சாட்டிய அவர், “நான் ஒரு பிராண்ட் அல்லது PR ஏஜென்சியை நடத்தினால், இவ்வளவு குறைவாக இன்ஃப்ளூயன்சர்களுக்கு கொடுக்க மாட்டேன்” என்று கூறினார். PR ஏஜென்சிகள் தங்களின் கமிஷனை எடுத்துக் கொண்டு, இன்ஃப்ளூயன்சர்களுக்கு குறைவான தொகையை வழங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
View this post on Instagram
இவரது வீடியோ இணையத்தில் வைரலாக, பல இன்ஃப்ளூயன்சர்கள் தங்களுக்கு ஏற்பட்ட ஒத்த அனுபவங்களைப் பகிர்ந்தனர். ஒரு நெட்டிசன், “ஒரு பிராண்ட் எனக்கு 50 AED மட்டுமே கொடுத்தது, அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னேன்” என்று பதிவிட்டார்.
மற்றொருவர், “50 AED பட்ஜெட் என்று ஒருவர் கூறினார், இலவசமாகவே செய்யச் சொல்லுங்கள் என்று நினைக்கிறார்களா?” என்று கேலி செய்தார். இன்னொரு பயனர், “டாக்ஸி கட்டணமே ஒரு வழி 110 AED ஆகிறது, பிராண்டுகள் இப்படி நடந்து கொள்வது வெட்கக்கேடு” என்று கருத்து தெரிவித்தார்.
12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு இன்ஃப்ளூயன்சருக்கு ஒரு பெரிய கம்பெனிக்கு 3,000 AED மட்டுமே வழங்கப்பட்டதாகவும் இவர் குறிப்பிட்டார், இது தொழில்முறை இன்ஃப்ளூயன்சர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை வெளிப்படுத்துகிறது.
