
சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், உலகையே அதிரவைக்கும் ஒரு புதிய கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.
இதன் மூலம், 1.36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள 3 மில்லிமீட்டர் அளவுள்ள சிறிய எழுத்துக்களையும் தெளிவாக படிக்க முடிகிறது. இது ஒரு பென்சிலின் அகலத்தைவிடச் சிறியது. வழக்கமான தொலைநோக்கிகளுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய முறையால் 14 மடங்கு அதிக தெளிவுத்திறனை பெற முடிகிறது என அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த சாதனைக்கு “ஆக்டிவ் இன்டென்சிட்டி இன்டர்ஃபெரோமெட்ரி” எனும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில், 8 அகச்சிவப்பு லேசர் கற்றைகள் வெளிவரச் செய்யப்படும். அவை எதிர்பார்க்கப்படும் இலக்கில் விழும்போது, அதிலிருந்து வரும் ஒளியின் பிரதிபலிப்பை இரண்டு வலுவான தொலைநோக்கிகள் பதிவு செய்கின்றன.
அந்த ஒளி வித்தியாசங்களை கணக்கிட்டு, இலக்கின் படம் மிகத் தெளிவாக மீண்டும் உருவாக்கப்படுகிறது. இந்த முறையின் மூலம், வெளியில் மிக தொலைவில் உள்ள மிகச் சிறிய பொருளையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது.
இந்த லேசர் கண்டுபிடிப்பு, எதிர்காலத்தில் பாதுகாப்பு, உளவுத்துறை, விண்வெளி ஆய்வு மற்றும் விஞ்ஞானத் துறைகளில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
இருப்பினும், இதற்கான ஒரு குறைபாடு என்னவெனில், இலக்கு பொருள் நேரடியாக லேசர் ஒளியில் ஒளிர வேண்டும் என்பதே. அதற்காக தற்போது விஞ்ஞானிகள், இந்த லேசர் முறையை செயற்கை நுண்ணறிவு (AI) உடன் இணைத்து, மேலும் மேம்படுத்த திட்டமிட்டு வருகிறார்கள்.