சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கிய நிலையில் இன்று உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட் இழந்து சுருண்டது. இதனால் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷகீல் 62 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வரை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்த நிலையில் ரோகித் சர்மா மற்றும் கில் இறங்கினர். இதில் ரோகித் சர்மா 20 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில் கில் 46 ரன்கள் வரை எடுத்து அவுட் ஆகினார். விராட் கோலி 111 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் (56) அரை சதம் கடந்தார். இறுதியில் இந்திய அணி 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்தது.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் மூலம் விராட் கோலி 3 சாதனை படைத்துள்ளார். அதாவது ஒரு நாள் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார். இதற்கு முன்பாக சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமாரா சங்ககாரா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்த நிலையில் தற்போது விராட் கோலியும் படைத்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கர் 350 இன்னிங்சில் 14,000 ரன்களை கடந்த நிலையில் சங்ககாரா 378 இன்னிங்ஸில் 14000 ரன்களைக் கடந்தார். ஆனால் விராட் கோலி 287 இன்னிங்ஸில் 14,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். மேலும் ஒரு நாள் தொடர்களில் தன்னுடைய 51 வது சதத்தையும் விராட் கோலி பூர்த்தி செய்துள்ளார்.
