திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவம், நகரம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழிலதிபர் இம்தியாஸ் மற்றும் அவரது மனைவி சபிதா குல்சு வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், பீரோவிலிருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர்.

வீட்டில் வேலை பார்த்த சக்திவேலை கொடூரமாக தாக்கியதோடு, வீட்டு நபர்களையும் கட்டிப்போட்டுக் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.  அப்போது, சபிதா வீட்டில் இருந்து வெளியேறி கூச்சலிட்டதால், கொள்ளையர்கள் சிக்காமல் தப்பி சென்றனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் விரைந்து விசாரணை செய்தனர். அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்த போதும், கொள்ளையர்கள் முகத்தை தெளிவாக அடையாளம் காண முடியவில்லை. பட்டப்பகலில் தொழிலதிபர் வீட்டுக்குள் நுழைந்து, அடித்து கட்டிப்போட்டு கொள்ளையடிக்க முற்பட்ட சம்பவம், நகர மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.

தற்போது இந்த வழக்கில் பெரும் திருப்பமாக, ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த போலீசாரான அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமலா பகுதியைச் சேர்ந்த இவர், இந்த கொள்ளையில் மூளையாக செயல்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரியவந்துள்ளது.

இதனால், தப்பிச்சென்ற நான்கு பேரையும் விரைவில் கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தொழிலதிபர் இம்தியாஸுக்கும் அருண்குமாருக்கும் என்னவிதமான தொடர்பு இருந்தது? எனும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.