கேரள மாநிலத்தில் உள்ள வெண்ணலையில் அல்லி (72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரதீப் என்ற மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். பிரதீப் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் அவரது மனைவி தனியாக வசித்து வருகிறார். பிரதீப் தனது தாய் அல்லியுடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி பிரதீப் தனது அக்கம் பக்கத்தினருடன் தகராறு செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அல்லியின் உடல் நலம் மோசமானது. உடனே பிரதீப் தனது தாயை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அல்லி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

குடிபோதையில் இருந்த பிரதீப் தனது வீட்டு முற்றத்தில் குழி தோண்டி தனது தாயை புதைத்து விட்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், அம்மாவின் இறுதி சடங்கிற்கு அக்கம் பக்கத்தினர் உதவவில்லை. உடலை அடக்கம் செய்ய என்னிடம் பணம் இல்லை. இதனால் வீட்டுக்குள்ளேயே குழிதோண்டி உடலை புதைத்து விட்டேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.