
விவசாயிகளின் குறுகிய கால வேளாண் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன், தமிழ்நாடு அரசு உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் (Kisan Credit Card – KCC) பயிர் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் வழங்கப்படும் என கூட்டுறவு துறை அறிவித்துள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம், விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் கடன்களை வழங்குவதற்கு உதவுகிறது.
இந்த திட்டத்தின் கீழ், பயிர்கள், கால்நடை பராமரிப்பு, மீன்வள வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்கான நடைமுறை மூலதனக் கடன்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ரூ.2 லட்சம் வரையிலான தனிநபர் வட்டி மானியக் கடன்கள் பிணையமின்றி வழங்கப்படலாம். பயிர் கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்கள் சேர்த்து அதிகபட்சம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இந்தக் கடன்கள் ஒரு ஆண்டுக்குள் திரும்ப செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
மேலும், வட்டியில்லா பயிர் கடன்கள், நகை அடமானப் பயிர் கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன்களுக்கு திட்டத்திற்கேற்ப வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிறப்பாக, உரிய ஆவணங்கள், மனுதாரரின் சொத்துப் பட்டியல், சுய சான்றுகள், கால்நடையுடன் புகைப்படம் உள்ளிட்டவை கோரப்படும். பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரே கடன் வழங்கப்படும்.
மேலும், மீன்வள வளர்ப்பு தொடர்பான கடன்களுக்கு படகு உரிமம், RC புத்தகம் மற்றும் உறுப்பினர் அடையாள அட்டை கட்டாயம். மேலும், CIBIL அறிக்கையின் மூலம் விண்ணப்பதாரர்கள் இதர வங்கிகளில் கடன் பெற்றுள்ளார்களா என உறுதிபடுத்த வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கும் கட்டாயமாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளை நிதியில் நிலைத்தடையச் செய்யும் இந்த முயற்சி, நாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.