
மத்தியப் பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கோசல்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நட்பின் பெயரில் 15 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தில், சிறுமியின் மைத்துனரும், அவரது மனைவியின் சகோதரரும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி சமீபத்தில் பள்ளி விடுமுறை காரணமாக தனது அத்தையின் கிராமமான சிஹோரா செல்லும்போது, அங்கு வசித்து வந்த ஹிருத்திக் படேல் என்ற இளைஞர் அவளுடன் பழகத் தொடங்கினார். பின்னர், ஹிருத்திக், சிறுமியை கோசல்பூரில் உள்ள ஓர் ஹோட்டலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் பின், சிறுமியை வீட்டிற்கு அழைத்து செல்லும்படி கூறி, ஹிருத்திக் தனது மனைவியின் சகோதரர் அமித் படேலிடம் அனுப்பியுள்ளார். ஆனால், காரில் வைத்து மது அருந்திய நிலையில் அமித் படேலும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
சம்பவத்தை அடுத்த நாளே சிறுமி தன்னுடைய பெற்றோரிடம் நிகழ்ந்தவற்றை கூறினார். அதனைத் தொடர்ந்து குடும்பத்தினர் கோசல்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். போக்சோ சட்டத்துடன் கூடிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், குற்றம் நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளர் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.