திருவாரூரில் தியாகராஜன்-மல்லிகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். தியாகராஜன் வெளிநாட்டில் வேலை பார்த்தவர். அவர் தனது மனைவி பெயரில் பல சொத்துக்களை வாங்கி வீட்டையும் கட்டியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தவுடன் தியாகராஜன் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். தனது சொந்த செலவில் மகனை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பினார். இந்த நிலையில் ரவிக்குமார் பெற்றோருக்கு பணம் எதுவும் அனுப்பவில்லை.

மேலும் சம்பளம் பற்றி கேட்டால் முதலாளி ஏமாற்றி விட்டதாக பெற்றோரிடம் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்த ரவிக்குமாருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். 2019 ஆம் ஆண்டு ரவிக்குமார் வீடு உள்ளிட்ட சொத்துக்களை வலுக்கட்டாயமாக தனது பெயருக்கு மாற்றி எழுதி வாங்கியுள்ளார். தற்போது கொல்லுமாங்குடி பகுதியில் ரவிக்குமார் பல வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார்.

ஆனால் பெற்றோரை வீட்டை விட்டு விரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தம்பதியினர் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மல்லிகா தங்களை தாங்களே பராமரித்துக் கொண்டு வாழ வழி இல்லை. இதனால் என்னையும் எனது கணவரையும் கருணை கொலை செய்ய அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார். இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.