வடமேற்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ள பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இன்று தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் இன்றைய தினம் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.