உத்தரபிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தை சேர்ந்த சுபாஷ் என்ற தொழிலாளிக்கு, ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை செய்ததாக வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஹாபூரின் பில்குவா பகுதியைச் சேர்ந்த மொஹல்லா ராணா பட்டி மகாதேவில் வசிக்கும் சுபாஷ், ஒரு சாதாரண தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 2024 பிப்ரவரியில் வந்த முதல் நோட்டீசை புரிந்து கொள்ளாமல் தவிர்த்த சுபாஷுக்கு, சமீபத்தில் மீண்டும் வந்த இரண்டாவது நோட்டீஸில் ரூ.7 கோடி மதிப்பிலான பரிவர்த்தனை தொடர்பாக பதில் கேட்கப்பட்டிருந்தது.

அதன்படி, 2020-21ம் ஆண்டு டோஹ்ரானா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சுபாஷ் பெயரில் ஜிஎஸ்டிஆர்-1 மற்றும் ஜிஎஸ்டிஆர்-3பி மூலம் ரூ.3.27 கோடி மற்றும் ரூ.3.75 கோடி என இரு பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில்,  நோட்டீஸை புரிந்து கொள்ள முடியாத சுபாஷ், தற்போது நியாயம் கோரி அதிகாரிகளை அணுகியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். தற்போது இந்த விஷயம் குறித்து வருமான வரித் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணைக்குப் பிறகு மட்டுமே, சுபாஷின் பெயரிலும் இந்த பரிவர்த்தனையிலும் உள்ள உண்மை தெளிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.