மத்தியப் பிரதேசம் க்வாலியர் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான அஜய் குஷ்வாஹா, கடந்த ஜூன் 15 ஆம் தேதி இரவு, தனது காதலியின் வீட்டின் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். ஜயராக்யா மருத்துவமனையின் தீக்காய பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், 14 மணி நேரம் உயிருக்காக போராடிய பிறகு ஜூன் 16 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணியளவில் இறந்தார்.

இந்த சம்பவத்தின் போது, அந்தப் பெண் அஜயை நிறுத்தாமல் வீடியோ எடுத்தது, இணையத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அஜய் இறப்பதற்கு முன்பு பதிவு செய்த வீடியோவில், “எனது பெயர் அஜய் குஷ்வாஹா. சிகந்தர் காம்பூவில் வசிக்கிறேன். எளிய குடும்பத்தைச் சேர்ந்தவன். சில நாட்களுக்கு முன்பு என் வீட்டுக்கு ரௌடிகள் அனுப்பி மிரட்டினர்.

பின்னர் அந்தப் பெண்ணின் தந்தை, திருமணம் செய்ய எனது தந்தையிடம் ரூ.5 லட்சம் கேட்டார். இல்லையென்றால் திருமணம் நடக்காது என்று கூறினார்” என தெரிவித்துள்ளார். அஜயும் அந்தப் பெண்ணும் 2016-ஆம் ஆண்டு திருமண விழாவில் சந்தித்து 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் 2023 முதல் அந்த பெண் அவரிடம் இருந்து விலகத் தொடங்கியதாகவும், பிற இளைஞர்களுடன் பேசத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது. திருமணம் பற்றி கேட்டபோது, அந்த பெண் முதலில் மறுத்து, பின்னர் ரூ.3 லட்சம் கேட்டதாகவும், அது கிடைக்கவில்லை என்பதால் அஜயை பொய்யான வழக்குகளில் சிக்க வைப்பதாக மிரட்டியதாகவும் வீடியோவில் கூறியுள்ளார்.

அஜயின் தந்தை சுரேஷ் குஷ்வாஹா கூறுகையில், “ஒருநாள் அந்தப் பெண்ணின் தந்தை 15-20 பேருடன் எங்கள் வீட்டுக்கு வந்து மிரட்டினார். என் மகன் அதிலிருந்து மன அழுத்தத்தில் சிக்கி, கடைசியில் உயிரையே விட்டு விட்டான். தீயிட்டுக் கொண்ட போது கூட யாரும் உதவவில்லை. அந்தப் பெண் வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.