உத்திரபிரதேசம் மாநிலம் மீரட் நகரில் 30 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தின் போது அந்த பெண்ணின் தந்தை கிட்டத்தட்ட 45 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார். அதாவது அந்தப் பெண்ணுக்கு தங்க நகைகளோடு ஒரு காரையும் பரிசாக கொடுத்ததோடு 15 லட்ச ரூபாய் ரொக்கமாகவும் கொடுத்துள்ளார். இவ்வளவு வரதட்சணை கொடுத்தும் அந்த பெண்ணின் கணவன் மற்றும் மாமியாருக்கு பேராசை என்பது அடங்கவில்லை. திருமணம் முடிந்த நாளிலிருந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தொடர்ந்து டார்ச்சர் செய்தனர்.‌

இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை தன்னுடைய தாய் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கூறி கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார். அதாவது திருமணம் முடிந்த ஒரு மாதத்தில் அந்த பெண்ணை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றிய நிலையில் 3 மாதங்கள் வரை அந்தப் பெண் தன்  தாய் வீட்டில் இருந்த நிலையில் பின்னர் கிராம பஞ்சாயத்துக்கு விவகாரம் சென்றது. இதைத் தொடர்ந்து அந்த பெண் தன் மாமியார் வீட்டிற்கு சென்ற நிலையில் மீண்டும் அந்த பெண்ணை தொடர்ந்து அவர்கள் கொடுமைப்படுத்தினர்.

ஆனால் அவர்கள் கூடுதல் வரதட்சனை கொடுக்காததால் ஆத்திரத்தில் எய்ட்ஸ் நோய் வருவதற்கான ஊசியை செலுத்தியுள்ளனர். இதில் அந்த பெண்ணின் உடல்நிலை மோசமான நிலையில் அவருடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பெண்ணின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தன் புகாரில் கடந்த வருடம் மே மாதம் என்னுடைய மகளுக்கு அவருடைய மாமியார் எச்ஐவி தொற்று வரும் ஊசியை செலுத்தினார். இதனால் என்னுடைய மகளின் உடல்நிலை மோசமான நிலையில் பரிசோதனை செய்ததில் எய்ட்ஸ் நோய் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அவருடைய கணவருக்கு அந்த பாதிப்பு இல்லை என்று கூறியுள்ளார். மேலும் இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளனர்.