
ஆந்திரா மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் நரேந்திரா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு நரேந்திராவுக்கு திருமணம் நடைபெற்றது. இவர் ஆன்லைன் செயலின் மூலம் கடன் வாங்கியுள்ளார். அந்த கடன் தொகை முழுவதையும் நரேந்திரா செலுத்தி விட்டார். கடைசியாக 2000 ரூபாய் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடன் செயலி ஊழியர்கள் 2000 ரூபாய் பணத்தைக் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்துள்ளனர்.
அது மட்டும் இல்லாமல் நரேந்திரா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் நரேந்திரா நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நரேந்திராவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.