
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பள்ளி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் விதமாக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ள நிலையில் தமிழ் புதல்வன் திட்டத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு நடப்பாண்டு முதல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் தொடங்குகிறது. தமிழ் புதல்வன் திட்டத்திற்காக 360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் தமிழகத்தில் தோராயமாக 3.28 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் இல்லாதவர்கள் அருகில் உள்ள மையங்களுக்கு சென்று ஆதார் எண்ணை பெற வேண்டும். ஆதார் மையங்கள் இல்லாத ஊர்களில் வசிப்பவர்களுக்கு கல்வி நிறுவனங்களே ஆதார் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.