தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் ஸ்ரீகாந்த். இவர் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது கொக்கைன் என்ற போதை பொருளை நடிகர் ஸ்ரீகாந்த் பயன்படுத்தியதாக போலீசார  அவரை கைது செய்துள்ள நிலையில் அவரும் தான் அதனை பயன்படுத்தியதாக ஒப்புக் கொண்டுள்ளதோடு அதனை தான் மட்டுமே பயன்படுத்தியதாகவும் வேறு யாருக்கும் விற்பனை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாந்த் என்பவர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு 8 முறை போதை பொருள் வாங்கி கொடுத்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் பிரசாத் நுங்கம்பாக்கம் பப்பில் தகராறு, வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்தது என ஏற்கனவே 5 குற்றசாட்டுகளில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் தற்போது தனக்கு கொக்கைன் என்ற போதை பொருளை பயன்படுத்த சொல்லிக் கொடுத்ததே பிரசாந்த் தான் என போலீஸிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது, தீங்கிரை என்ற படத்திற்காக எனக்கு பிரசாந்த் 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டி இருந்தது.

நான் அவரிடம் பணத்தை கேட்கும் போதெல்லாம் எனக்கு கொக்கைன் வாங்கித் தருவார். 2 முறை அவர் வாங்கி கொடுத்த நிலையில் அடுத்ததாக நானே கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளானேன். வேறொரு வழக்கில் பிரசாந்தை கைது செய்வதற்கு முன்பாக எனக்கு 1/4 கிலோ கொக்கைன் வாங்கி கொடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூன் 22 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னுடைய மகனுக்கு உடல்நலம் சரியில்லை எனவும் அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதால் ஜாமின் வேண்டும் என மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.