கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (31) மற்றும் அவருடைய சகோதரர் பிரபு ஆகியோர் ராணுவத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த நிலையில், கடந்த 8-ம் தேதி கவுன்சிலர் சின்னச்சாமி, அவருடைய மகன்கள் குரு சூரியமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் ஆகியோர் பொதுக் குடிநீர் தொட்டிக்கு அருகில் பிரபாகரன் துணி துவைத்தது தொடர்பாக அவரது வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் திடீரென பிரபாகரன், அவருடைய சகோதரர் பிரபு மற்றும் தந்தை மாதயன் ஆகிய 3 பேரையும் அவர்கள் கடுமையான முறையில் தாக்கியுள்ளனர்.

இதனால் படுகாயம் அடைந்த மூன்று பேரும் ஓசூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பிரபாகரன் போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் கவுன்சிலர் சின்னச்சாமி, அவருடைய மகன்கள், குரு சூரியமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டியன் மற்றும் மணிகண்டன், மாதயன், புலிப்பாண்டி, வேடியப்பன் மற்றும் காளியப்பன் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தவர்களில் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராணுவ வீரர் பிரபு திடீரென உயிரிழந்ததால் வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். அதன் பிறகு தலைமறைவாக இருந்த கவுன்சிலர் சின்னச்சாமி, காளியப்பன் மற்றும் புலிப்பாண்டி ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ராணுவ ரெஜிமென்டிற்கு கிருஷ்ணகிரி போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். மேலும் சாதாரண துணி துவைக்கும் பிரச்சனைக்காக ஒருவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.