
கேரளாவின் தலைச்சேரி பகுதியில் 18 வயது மாணவி ஒருவர், இணையதளங்களில் பரவிய தீவிர உடல் எடையை குறைக்கும் முறையை பின்பற்றியதனால், அனோரெக்சியா (Anorexia Nervosa) என்ற தீவிர உணவுக் குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த மாணவி ஆறு மாதங்களுக்கும் மேலாக வெறும் தண்ணீர் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை சாப்பிட்டதால் உடல்நிலை மிகவும் மோசமடைந்து, தலச்சேரி கூட்டுறவு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டிருந்தார்.
மருத்துவர்கள் அவருடைய நிலைமை குறித்து கூறும்போது, “அவருடைய உடல் எடை வெறும் 24 கிலோ மட்டுமே இருந்தது. இரத்தத்தில் சர்க்கரை அளவு மிகக் குறைவாக, சோடியம் மற்றும் இரத்த அழுத்தம் மிக மோசமான நிலையிலிருந்தன. வென்டிலேட்டர் ஆதரவுடன் இருந்தாலும், அவர் உயிரிழப்பதைத் தடுக்க முடியவில்லை” எனத் தெரிவித்தனர். மாணவியின் உடல் நிலை கடந்த ஐந்து மாதங்களாக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இது குறித்த விபரங்களை அவரது குடும்பத்திலிருந்து மறைத்து வைத்திருந்ததாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
உணவுக் குறைபாடு மற்றும் தீவிர உண்ணாவிரதத்தின் அபாயங்கள்
அனோரெக்சியா நர்வோசா என்பது ஒரு ஆழ்ந்த உணவுக் குறைபாடு நோய், இதில் பாதிக்கப்பட்டவர் தன்னை அதிக எடையுடன் காண்கிறார், ஆனால் உண்மையில் அவருடைய உடல் மிகவும் குறைவாக இருப்பதோடு, உடல் எடையை மேலும் குறைப்பதற்காக உணவை முற்றிலும் தவிர்ப்பதற்கும் முன்வருவார்கள். இது உடல்நலத்தில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
தற்போது “க்ராஷ் டயட்” (Crash Diet) மற்றும் நீரால் மட்டுமே இருக்கும் வாட்டர் ஃபாஸ்டிங் (Water Fasting) போன்ற தீவிர உடல் எடைக் குறைப்புத் திட்டங்கள் சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளன. ஆனால் மருத்துவர்கள் இதனை மருத்துவ ஆலோசனையில்லாமல் பின்பற்றக் கூடாது என எச்சரிக்கின்றனர்.
வெறும் தண்ணீர் உட்கொண்டு நீண்ட நாட்கள் வாழ்வது உயிருக்கு ஆபத்து!
இந்த மாணவி நீண்ட நாட்கள் வெறும் “நீர் உணவு” (Water Fasting) முறையை பின்பற்றியதால் உயிரிழந்திருக்கிறார். “ரிலா மருத்துவமனை” (Rela Hospital) மூத்த நுாற்றியலாளர் ரேஷ்மா அலீம், நீரால் மட்டுமே இருக்கும் உணவுமுறையின் அபாயங்களை விளக்கினார்.
“நீரால் மட்டுமே உள்ள உணவுமுறை பொதுவாக 24 முதல் 72 மணி நேரத்திற்குள் முடிக்கப்படும். ஆனால் 3 நாட்களுக்கு மேல் தொடர்ந்து நீர் உணவுமுறையை பின்பற்றுவது மிகுந்த ஆபத்தானது. இது நீரிழிவு, மூட்டுவலி (Gout), அனோரெக்சியா போன்ற உணவுக் குறைபாடு நோய்கள் உள்ளவர்களுக்கு மிகவும் ஆபத்தாக இருக்கலாம்” எனவும், இதுபோன்ற உண்ணாவிரதங்கள் மருத்துவ ஆலோசனையின்றி தொடரக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
அதிக எடைக் குறைப்பு உடல் ஆரோக்கியத்திற்கே கேடு!
போர்டிஸ் மருத்துவமனை (Fortis Hospital) முதுநிலை நுாற்றியலாளர் தீப்தி கதுஜா, க்ராஷ் டயெட்டிங் உடலுக்குத் தாங்க முடியாத முடக்கங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கிறார்.
“இந்த வகை டயெட் முறைகள் உடலின் சக்தியை மட்டுப்படுத்தும், நரம்பு மண்டல பாதிப்புகளை ஏற்படுத்தும், மன அழுத்தம், கவலை, உடல் மெலிவாதல் மற்றும் எதிர்காலத்தில் விரைவாக முதுமை அடையச்செய்யும். எனவே, உடல் எடையை கட்டுப்படுத்த விரும்புவோர் சீரான உணவு முறையுடன் தகுந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று அவர் கூறினார்.
மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஆரோக்கியமான உடல் எடைக் குறைப்பு முறை
மருத்துவர்கள், எடையை கட்டுப்படுத்த தீவிரமான உணவுக் குறைப்புக்குப் பதிலாக, சீரான உடல் எடைக் குறைப்பு முறைமைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.
“ஒரு மாதத்திற்கு 2 கிலோ எடையை குறைப்பது பாதுகாப்பானது. ஒரு நாளைக்கு 500 கலோரிகள் குறைத்து, வாரத்திற்கு 0.5 கிலோ எடையைக் குறைக்கும் ஒரு முறையே உயிருக்கு பாதிப்பு இல்லாத உடல் எடைக் குறைப்பு முறை. உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க, சீரான உணவு முறையுடன் மெதுவாக எடையைக் குறைப்பது தான் சிறந்த வழி” என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சமூக ஊடக உணவு முறைகளை கண்மூடித்தனமாக பின்பற்ற வேண்டாம்!
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவிய தீவிர உடல் எடைக் குறைப்பு முறைமைகள் எவ்வளவு ஆபத்தானது என்பதை வெளிப்படுத்துகிறது. சமூக ஊடகங்களில் பலரும் மருத்துவ ஆலோசனையின்றி உணவுக் குறைப்புக் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இதுபோன்ற தீவிர டயெட் முறைகள் உடலுக்கு மிகுந்த கேடுகளை ஏற்படுத்தும் என்பதால், தயவுசெய்து சுயமாக உணவுப் பழக்கங்களை மாற்றி கொள்ளாமல், மருத்துவரின் ஆலோசனை பெற்று, உடல் ஆரோக்கியத்தை முதன்மையாகக் கருத வேண்டும் என மருத்துவர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.