
திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற முத்துசாமி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். இதனையடுத்து மே 4-ஆம் தேதி வைதேகி காணாமல் போனார்.
நேற்று முத்துசாமியின் வீட்டிற்கு அருகே காலி இடத்தில் மண்ணுக்குள் எதையோ புதைத்து வைத்தது போல தடயம் தெரிந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பழனி வட்டாட்சியர் பிரசன்னா தலைமையில் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர்.
அப்போது முத்துசாமியின் உடல் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துசாமியை கொலை செய்தது யார்? வைதேகி ஏன் காணாமல் போனார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.