உத்தரப்பிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் அமாசி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சவுதி அரேபியா ஏர்லைன்ஸின் விமானத்தில் தீவிபத்து ஏற்பட்டது. ஜெட்டாவிலிருந்து ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிய 242 யாத்ரீகர்களுடன் வந்த இந்த விமானம், தரையிறங்கிய பிறகு டாக்ஸிவே பகுதியில் சென்றபோது, இடது சக்கரத்தில் இருந்து தீப்பொறிகள் மற்றும் அடர்ந்த புகை வெளியேறத் தொடங்கியது.

விமானியின் விழிப்புணர்வால் உடனடியாக கட்டுப்பாட்டுக் குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விமான நிலையத்திலிருந்த தீயணைப்பு வாகனங்கள் 20 நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்து நுரை மற்றும் தண்ணீர் மூலம் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன.

விமானம் முழுவதும் ஆய்வு செய்யப்பட்டபோது, சக்கரத்தில் ஏற்பட்ட ஹைட்ராலிக் கசிவே இந்த பிரச்சனையின் காரணம் என தெரியவந்தது. சிறிய தவறும் பெரும் உயிரிழப்பாக மாறக்கூடிய சூழ்நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, விமானத்தின் பழுது சரிசெய்யப்பட்டாலும், மாலை வரை அது சையாகவில்லை இதனால் அந்த விமானம் லக்னோவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சவுதி அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் காலியாக மீண்டும் ஜெட்டா விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் ஹஜ் யாத்ரீகர்களிடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இருந்தபோதும் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மீட்புப் படையினரின் செயல்முறை கவனத்தால் பெரும் விபத்தைத் தவிர்க்க முடிந்தது.