கனமழை எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள், திருவள்ளுவர் பல்கலை மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மிக்ஜாம் புயல் எதிரொலியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மக்களின் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை நடைபெற இருந்த வேலூர் திருவள்ளுவர் பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கனமழை எதிரொலியாக சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 8ம் தேதி வரை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாளை நடைபெற இருந்த தேர்வை சென்னை பல்கலைக்கழகம் ஒத்தி வைத்துள்ளது.