மின்சாரம் தொடர்பாக வீதி மற்றும் சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை மறுத்து, வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு. சிவசங்கர் தெளிவுபடுத்தியுள்ளார். இதுதொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, பொதுமக்களிடையே நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது.

அரசு அறிக்கையில், “மே 20ஆம் தேதி இதேபோன்ற வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், மீண்டும் வதந்திகள் பரவி வரும் நிலையில், தற்போது மீண்டும் தெளிவாகக் கூறுகிறோம். வீட்டு மின் இணைப்புகளுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் எந்த ஆணையையும் இதுவரை வெளியிடவில்லை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணம் தொடர்பாக முடிவு எடுத்தாலும், அது நடைமுறைக்கு வரும் போது வீட்டு நுகர்வோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் தீர்மானிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். அதாவது, எந்தவொரு கட்டண உயர்வும் இல்லாமல், தற்போதைய சலுகைகள் தொடரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுவரும் 100 யூனிட் இலவச மின் சலுகை உள்ளிட்ட அனைத்து இலவச மின்சார உதவிகளும் தொடரும். எனவே, மின் கட்டண உயர்வு குறித்த தேவையற்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் எனவும், இவ்வாறு தவறான தகவல்களை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு சார்பில் எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.